முகநூலில் எங்கள் செய்திகளை  படிக்க க்ளிக் செய்யவும்.!

அழைக்கிறது காவல் துறை... (1)

ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் போலீஸ் பணியில் சேரவேண்டும் என்பதே இத்தொடரை எழுதுவதன் நோக்கம்.

போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ளும் வழிமுறையை சொல்வதன் மூலம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிச்சயம் உங்களுக்கு ஏற்படும். உலகின் ‘நம்பர் -1’ போலீஸ் என்று பாராட்டப்படும் ஸ்காட்லாந்து போலீசுக்கு அடுத்த இடத்தில் தமிழக போலீஸ் இடம் பெற்றுள்ளது. உள்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும் போலீஸ் துறை என்பதால் அரசு துறைகளிலேயே போலீஸ் துறைக்கு தனி முக்கியத்துவம் உண்டு.


இத்தொடரில், முதலாவதாக கான்ஸ்டபிள் பணி, இரண்டாவதாக சப் இன்ஸ்பெக்டர் பணி மற்றும் மூன்றாவதாக டி.எஸ்.பி., பணி விபரங்களை பார்ப்போம்.


இப்பணிகளுக்கு தேவைப்படும் வயதுவரம்பு, கல்வித்தகுதி, தேர்வு செய்யும் முறை, தேர்வு பற்றிய விவரங்கள், உடல்திறன் அறிய நடத்தப்படும் சோதனைகள் ஆகியவற்றையும், தேர்வில் வெற்றி பெறுவது பற்றியும் பார்ப்போம்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக்குழுமம் (TNUSRB) என்ற அமைப்புதான் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது.


போலீஸ் கான்ஸ்டபிள்:

இப்போது காவலர் பணியில் சேருவது குறித்த வழிமுறைகளை முதலில் பார்ப்போம். 

தகுதி : காவலர் பணியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். 

தமிழில் பேச, எழுத, படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். 
தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.

ஒரு வேளை தமிழில் தேர்ச்சி பெறாமல் இருந்து காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால், பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

பணிக்கு சேர விரும்புவோர், 18 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். 

இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு 26 வயதுக்கு மேற்படாதவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு 29 வயதுக்கு மேற்படாதவராகவும், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்கு மேற்படாதவராகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு அனைத்து பிரிவினருக்கும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்கவேண்டும்.

முன்னாள் ராணுவத்தினரில் வாகன ஓட்டுனர், ஆட்டோ மெக்கானிக், ஆட்டோ எலக்டிரிஷியன், ஆர்மரர்ஸ்க்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடக்கும். உடல்திறன் போட்டிகள் கிடையாது. 

மற்ற ராணுவ வீரர்களுக்கு உடல்திறன் போட்டியும் உண்டு.

முதலில், காவலர் பணிக்காக தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை உட்பட எல்லா விவரங்களையும் குறிப்பிட்டு நாளிதழ்களில் அரசு அறிவிப்பு வெளியிடப்படும். காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் மற்றும் பெண்கள் அரசு அறிவித்துள்ளபடி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பிய பிறகு, அவை பரிசீலிக்கப்பட்டு, அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.


இந்த பணிக்காக தேர்வு செய்யப்படுவது பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் எழுத்துதேர்வு (Written test) நடத்தப்படுகிறது. அதன் பிறகு, உடல்கூறு அளத்தல் (Physical measurement), உடல்தாங்கும் திறனறித் தேர்வு (Endurance test), உடல்திறன் அறியும் தேர்வு (Physical efficiency test), மருத்துவ பரிசோதனை, போலீஸ் வெரிபிகேஷன் ஆகியவை நடத்தப்படும்.


இவை எல்லாவற்றிலும் தேர்வான பிறகு அவருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதன் பிறகு அவருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர், அவருக்கான பணி பிரித்துக் கொடுக்கப்பட்டு பணிக்கு அனுப்பப்படுகிறார்.


முகநூலில் எங்கள் செய்திகளை  படிக்க க்ளிக் செய்யவும்.!

அழைக்கிறது காவல் துறை... (2)


காவலர் பணிக்கான மதிப் பெண்கள் ஒதுக்கீடு: எழுத்துத் தேர்வு(பொதுஅறிவு மற்றும் உளவியல் /மனோதத்துவம்) 80 மதிப்பெண்கள், உடல் திறன் தேர்வு 15 மதிப்பெண்கள், சிறப்பு மதிப்பெண்கள் (என்சிசி, என்.எஸ்.எஸ்., மற்றும் விளையாட்டுச்சான்றிதழ்) 5 மதிப்பெண்கள், ஆகமொத்தம் 100 மதிப்பெண்கள்

எழுத்துத் தேர்வு: 
எழுத்துத் தேர்வை பொறுத்தவரை 10ம் வகுப்பு தரத்தில் இருக்கும். பொது அறிவு மற்றும் உளவியல் தேர்வு என இரண்டு பிரிவாக எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. பொது அறிவு பிரிவில் 50 மதிப்பெண்களும், உளவியல் பிரிவில் 30 மதிப்பெண்களும் வழங்கப் படுகின்றன. இவற்றில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண்களை தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் நிர்ணயிக்கும். எழுத்துத்தேர்வு அப்ஜெக்டிவ் தரத்தில் இருக்கும். ஒரு கேள்விக்கு 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது சரியோ அதை வட்டமிட வேண்டும். 


விடைத்தாள் தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். அதில்தான் விடையை குறிக்க வேண்டும். உளவியல் தேர்வை பொறுத்தவரை இயற்கையான ஆற்றலையும், மனோபாவத்தையும் சோதிப்பதாக இருக்கும். உதாரணமாக ஒரு சம்பவத்தை தெரிவித்து அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள் என்ற அமைப்பில் கேள்விகள் அமைந்திருக்கும்.


எழுத்து தேர்வு மற்றும் உளவியல் தேர்வு தொடர்பாக விரிவாக பின்னர் கூறுகிறேன். 


உடல்கூறு அளத்தல் தேர்வு: 

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கப்படும். இதன்பின், உடல்கூறு அளத்தல் தேர்வு நடத்தப்படும். 

இதில் உயரம், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) போன்றவை அளவெடுக்கப்படும். 


ஆண்களைப் பொறுத்தவரை உயரம் குறைந்த அளவு 168 செ.மீ, இருக்கவேண்டும் 


(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 165 செ.மீக்கு குறையாமல் இருக்கவேண்டும்).

பெண்களை பொறுத்தவரை உயரம் குறைந்தபட்சம் 157 செ.மீ. இருக்க வேண்டும், (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 155 செ.மீக்கு குறையாமல் இருக்கவேண்டும்). 

ஆண்களைப் பொறுத்தவரை அனைத்து வகுப்பினர்களுக்கும் சாதாரண நிலையில் மார்பளவு 81 செ.மீ க்கு குறையாமல் இருக்கவேண்டும். 


மூச்சடக்கிய மார்பு விரிவாக்கம் (உதுணீச்ணண்டிணிண) குறைந்த அளவு 5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும். 


உடல்கூறு அளத்தலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உடல் தாங்கும் திறன் அறியும் தேர்வும் நடத்தப்படும். 


உடல் தாங்கும் திறன் அறியும் தேர்வு: 

உடல் தாங்கும் திறன் அறியும் தேர்வு ஆண் விண்ணப்பதாரர்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும். இதற்கு மதிப்பெண்கள் ஏதும் கிடையாது. ஆனால், இதில் தேர்ச்சி பெற்றவர்களே அடுத்தகட்ட தேர்வான உடல் திறன் அறியும் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.

உடல் தகுதித் தேர்வு: 
இத்தேர்வில் உள்ள கயிறு ஏறுதல், நீளம் (அ) உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீ (அ) 400 மீ ஓட்டப் போட்டியில் ஏதேனும் ஒன்றில் ஒரு நட்சத்திரம் கூட எடுக்கத் தவறினால் அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். 

ஆண்களைப் பொறுத்தவரை கயிறு ஏறுதல் கட்டாயமானது.
கயிற்றில் கால் படாமல் கைகளின் உதவியால் மட்டுமே கயிற்றை பிடித்து ஏற வேண்டும். 

தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றில் குறைந்தபட்சம் 6 மீட்டர் ஏறினால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப் பெண்கள்), குறைந்தபட்சம் 5 மீட்டர் ஏறினால் 1நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) வழங்கப்படும். 


அடுத்ததாக, நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் ஆகிய இரண்டில் எதை சுலபமாக கருதுகிறோமோ அதில் கலந்து கொள்ளலாம்.



நீளம் தாண்டுதலில் குறைந்தபட்சம் 4.5 மீட்டர் தாண்டினால் 2 நட்சத்திரங்கள்



(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 3.80 மீட்டர் தாண்டினால் 1 நட்சத்திரம்

(2 மதிப்பெண்கள்)வழங்கப்படும். 

உயரம் தாண்டுதலில் குறைந்தபட்சம் 1.4 மீட்டர் தாண்டினால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 1.2 மீட்டர் தாண்டினால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்)வழங்கப்படும்.


மூன்றாவது, 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம், இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதில் கலந்து கொள்ளலாம். 


100 மீட்டர் தூரத்தை குறைந்தபட்சம் 13.5 விநாடிகளில் கடந்தால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) 15 விநாடிகளுக்குள் கடந்தால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) வழங்கப்படும். அல்லது 400 மீட்டர் தூரத்தை குறைந்தபட்சம் 70 வினாடிகளில் கடந்தால் 2 நட்சத்திரங்கள்(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 80 விநாடிகளில் கடந்தால் 1 நட்சத்திரம் (2 மதிப் பெண்கள்) வழங்கப்படும். 


பெண் விண்ணப்பதாரர்களை பொருத்தவரை, நீளம் தாண்டுதலில் குறைந்தபட்சம் 3.75 மீட்டர் தாண்டினால் 2 நட்சத்திரங்கள்(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 3.25 மீட்டர் தாண்டினால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) வழங்கப்படும். 



அடுத்தது இரும்பு குண்டு எறிதல் அல்லது கிரிக்கெட் பந்து எறிதல் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் கலந்து கொள்ளலாம்.



குண்டு எறிதலில், குறைந்தபட்சம் 5.5 மீட்டர் எறிந்தால் 2 நட்சத்திரங்கள்



(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 4.5 மீட்டர் எறிந்தால் 1 நட்சத்திரம்

(2 மதிப்பெண்கள்) வழங்கப்படும். 


கிரிக்கெட் பந்து எறிதலில், குறைந்தபட்சம் 21 மீட்டர் தூரம் எறிந்தால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 17 மீட்டர் எறிந்தால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) வழங்கப்படும். 


மூன்றாவது, 100 மீட்டர் தூரத்தை குறைந்தபட்சம் 15.5 செகண்டில் ஓடினால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 16.5 செகன்டில் ஓடினால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்)வழங்கப்படும். 


அல்லது 200 மீட்டர் தூரத்தை குறைந்தபட்சம் 33 செகண்டில் ஓடினால் 2 நட்சத்திரங்கள்



(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 36 செகண்டில் ஓடினால் 1 நட்சத்திரம் 



(2 மதிப்பெண்கள்) வழங்கப்படும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பதாரர் கலந்து கொள்ளலாம்.



உடல் திறன் அறியும் தேர்வில் பெண்களை பொறுத்தவரை போட்டியில் கலந்துகொண்டு நட்சத்திரம் பெறவில்லை என்றாலும் போட்டியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள்... 

- சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
 
Top